மன்னார் பேசாலை கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் சந்தேக பொருட்கள் இருப்பதாக இன்று புதன் கிழமை மாலை 3.45 மணி அளவில் மன்னார் பதில் நீதவான் இ.கயாஸ் பெல்டானோ முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அகழ்வு பணி நீண்ட நேரம் இடம் பெற்ற போதும் எவ்வித பொருட்களும் கிடைக்கவில்லை.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக பேசாலை பகுதியில் இவ்வாறான சந்தேக பொருட்கள் இருப்பதாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் அகழ்வு பணி இடம்பெற்ற போதும் குறித்த பகுதிகளில் எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.
இன்று புதன் கிழமை அகழ்வுப் பணி இடம் பெற்ற குறித்த வீட்டின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிறு இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 2.30 மணி வரை மன்னார் பொலிஸார் தன்னிச்சையாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாருடன் முரண்பட்ட நிலையிலேயே குறித்த அகழ்வுப் பணி திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இன்று புதன் கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் நீதிமன்றில் உத்தரவுக்கு அமைவாக இன்று புதன்கிழமை மாலை அகழ்வுப் பணி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்